
மல்லையின் மலைகளிலே 
மைந்தனாய் எண்ணப்படும் 
அர்ச்சுனன் தவம் 
இருபத்தேழு மீட்டர் நீளம்
பன்னிரண்டு மீட்டர் உயரம் 
கொண்டு 
காலைப்பொழுதில் 
செம்பரிதியின் செங்கரங்கள் 
தன்னைத் தழுவ 
நிமிர்ந்த நன்னடையும் 
நேர்கொண்ட பார்வையுமாய் 
பாரதி கண்ட புதுமை பெண்ணை 
பாருக்கு உணர்த்திடும் வண்ணம்
கம்பீரம் காட்டுகிறது
இந்த அர்ச்சுனன் தவம்.
மானிடர்க்கு உண்டாம் 
ஐம்புலன் 
இந்த மைந்தனுக்கோ 
நூற்று ஐம்பத்து மூன்று புலன்கள்.
மனிதனின் கற்பனையை மிஞ்சிய 
எத்தனையோ 
உருவங்களைத் தன்னுள்கொண்டு 
அனைவரையும் ஆழ்த்துகிறது 
வியப்பில்.
ஏட்டில் உள்ள 
மகாபாரதத்துக்கு 
போட்டியாய் 
உருவங்களை 
காட்சிப்படுத்தி செதுக்கி 
மலைக்கவைத்துள்ளனர்.
கானக சமுதாயத்தின் 
கவின்மிகு கோலம் 
யாவும்..
கற்சிலைகளாய்.
கொண்டவளின் அன்புக்காக 
ஒரு தாஜ்மஹால்.,
ஆண்டவனின் அன்புக்காக 
ஒரு பிரகதீஷ்வரர் ஆலயம்.,
இப்படி காரணம் கொண்டு  
உருவான கட்டிடங்களூக்கு 
மத்தியில்..
பாறையில்  
உளிகள் உருகொடுத்த 
இராஜ முத்திரைகள் இவை.
 

விதியை நொந்து 
விரக்தியின் விளிம்பில் 
விம்மி அழுவோர்க்கு 
வேறுபாடின்றி 
வினை தீர்க்கும் 
விஷ்ணுபெருமானின் 
குடியிருப்பு  கோவிலும்
மண்ணில் பிறந்த மனிதன் 
மனதை நிலைப்படுத்தி 
ஆண்டவனை அடையாள்ம் காண 
காடு மலைகளில் 
தன்னை மறந்து தவமிருக்க 
 
இதிகாசங்களில் 
இரண்டாவது மைந்தன் 
அர்ச்சுனன் அஸ்திரம் பெற
பன்னிரண்டு ஆண்டுகள் 
தன் விலா எலும்பு தெரிய 
ஒற்றைக் காலில் நின்று 
தாமரை மொட்டு போல் 
தவம் செய்யும் காட்சியும் 
 
அவரோடு இணைந்த 
மகரிஷிகள் 
தங்கள் தாகங்களை 
த்யக்கமில்லாமல் 
தாரைவார்த்து 
தளர்ந்த மேனியின் 
எலும்புகள் எத்தனிக்க 
பெருக்கல் குறிகாட்டும் 
கால்களோடு  நின்று..
பங்கு கேட்க்கின்றனர் 
அஸ்திரத்தில்.
சித்தம் தெளிய 
சிந்தை பொலிய 
அவனியில் ஆண்டவன் 
பெருமையை பேச 
சிவனின் வலதிடதாய் 
பானுவும் மதியும் உதயம்.
தாண்டவ மூ்ர்த்தியின் 
சிரசு தாரகை 
கங்கை 
இந்த மலையின் நடுவில்  
பாய்ந்தோடியதாய் ஐதீகம்.
நெடும் பயணக் களைப்பில் 
இந்திரனின் ஐராவதம் 
கங்கையில் 
தாகம் தணிய 
தன் சேயுடன் நிற்கும் காட்சி 
தத்ரூபம்.
சுட்டுவிரல் 
மற்றும் நடுவிரலின் 
விரிந்த வடிவம் காட்டி நிற்கிறது  
இந்த மலையின் மையம்.
அதில் மகிழ்ந்தாடும் 
ஐந்து தலை நாகா 
மூன்று தலை நாகினி 
தமையனாய் 
நாகேந்திரன்.
பிறர்க்கென வாழ்தலில் 
உறுதி கொள்ளும் 
பகீரதன் 
முன்னோர் பிழைக்க 
பங்கற்கிறார் தவத்தில்.
பாண்டவர்க்கு 
பக்தியை 
பண்பை
பயிற்றுவித்த 
குரு துரோணரையும் 
நினைவுகூறுகிறது 
இந்த பாறை.
தேவலோக தேவரையும்..
பூலோக மானிடரையும் 
வடித்த பல்லவர்கள் 
ஆதிகால 
விலங்குகளையும் விட்டு வைக்க வில்லை 
மங்கையின் மகிழ்ச்சி 
துள்ளலுகு 
மாதிரி காட்டும் 
கவரிமான் 
தன்னழகு காலால் 
மூக்கு சொறியும் காட்சி 
இயற்கையிடம் 
இனாம் கேட்பது போல் உள்ளது.
பாரதத்தின் பெருமகன் 
பண்டித நேருவின் 
பாக்கியப்புதல்வி 
மல்லைக்கு வந்த 
பொழுதொன்றில் 
அவர் கண்களை கவ்விய 
பெருமை 
இந்த மானுக்கு உண்டு.
அம்மானின் உருவை 
பாரத் தேசத்தின் 
பத்து ரூபாய் தாளில் 
பதிப்பித்து 
பல்லவன் பெருமையை 
பாருக்கு சொன்னதும் 
அவரேதான்.
பெரியோரின் பெருமைக்கு 
மதிப்பளித்து 
பின்பற்றும் மனிதர்கள் மத்தியில் 
தன் இரையான 
எலியை கவர இயலாமல் 
அர்ச்சுனனைப்போல் 
முன்னங்கால் மேலுயர்த்தி 
மோன தவமியற்ற 
பூனை உருவை 
சிலையென நம்பி 
அருகில் சென்ற எலியை 
கண்ணிமைப்பொழுதில் 
கவ்வி கபளீகரம் 
செய்ததால் 
வயிறு புடைத்திருக்கும் காட்சி
அற்புதம்.
 
 

குரங்குகள் இரண்டு 
பேன் பார்கும் காட்சி 
குதூகலம்.
பல்லவன் 
கூடிவாழும் மாண்பின்பை 
உணர்த்தவே 
செதுக்கிவைத்தானோ 
மந்தி உருவத்தை..?
பொன்னான வாழ்வு 
பொருள் தேடலில் கழிவதால் 
இளைப்பாறல் 
இங்கு இல்லாமல் போனது.
களைப்பை போக்க 
கைக்கொண்ட முறைதான் 
பேன் பார்க்கும் சூட்சுமம்.
பெண் குரங்கு பார்த்தால் 
பொதுபோக்கு எனலாம் 
இங்கு ஆணு்ம் பார்ப்பதால் 
ஆணும் பெண்ணும் 
அன்பாய் வாழும் 
பண்பைக்காட்ட 
பல்லவன் வடித்த 
வாழ்க்கை சித்திரம்.
ஐந்தறிவானாலும் 
ஆறாத அன்போடு 
அவனியில் வாழும் 
ஆறறிவு மாந்தரெலாம்..
குரங்காய் இருந்து பின் 
மனிதரான 
நிஜம் நிலைக்க 
குட்டிக்கு பாலூட்டும் 
பாங்கான காட்சி.